Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இது உங்கள் இடம்/இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

PUBLISHED ON : மே 31, 2010 12:00 AM


Google News
Latest Tamil News

முதல்வரின் கூற்று சரியல்ல!ஆ.பட்டிலிங்கம், பேரூர், கோவையிலிருந்து எழுதுகிறார்: "பஸ்களை நாட்டுடமை ஆக்கியதே, பொது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்பதற்காகத்தானே தவிர, லாபம் ஈட்ட வேண்டுமென்ற எண்ணத்தோடு அல்ல.

அதனால் தான் பெட்ரோல், டீசல் விலை பல முறை உயர்த்தப்பட்ட போதிலும் கூட, பஸ்களை அரசே நடத்துவதால் பஸ் கட்டணங்களை உயர்த்தவில்லை' என, தமிழக முதல்வர் கூறியுள்ளார்.ஏர் பஸ், சொகுசு பஸ், தாழ்தள பஸ் போன்ற பெயரில் ஏராளமான பஸ்களைவிட்டு, கண்டபடி கட்டணத்தை உயர்த்தி, மக்களை பாடாய் படுத்திக் கொண்டுள்ளது, போக்குவரத்துத்துறை என்பதை, தமிழக முதல்வரின் கவனத்திற்கு யாரும் கொண்டு செல்லவில்லை என, எண்ணுகிறேன். சாதாரண பஸ் போதும், கட்டணமும் குறைவாக இருக்க வேண்டும் என்று தான், மக்கள் எதிர்பார்க்கின்றனர். சொகுசு பஸ் தான் வேண்டும் என, எந்த மக்களும் கோரிக்கை வைக்கவில்லை; போராட்டமும் நடத்தவில்லை. உதாரணமாக, செம்மொழி மாநாடு நடைபெறும் கோவை பேரூர் செல்ல, சாதாரண பஸ்களில், மூன்று ரூபாய் கொடுத்தால் போதும். ஆனால், சொகுசு பஸ்சில் ஏழு ரூபாய் கொடுக்க வேண்டும்.அதேபோல், டவுன் ஹாலில் இருந்து காந்திபுரம் செல்ல சாதாரண பஸ்சில், இரண்டு ரூபாய் கொடுத்தால் போதும். ஆனால், சொகுசு பஸ்சில் ஐந்து ரூபாய் கொடுக்க வேண்டும். "சொகுசு பஸ்சில் ஏன் ஏறுகிறாய், சாதாரண பஸ்சில் செல்வது தானே?' என்ற கேள்விக்கும், பதில் தர விரும்புகிறேன்... சாதாரணமாக ஒரு வழித்தடத்தில் ஐந்து சாதாரண பஸ் ஓடிக் கொண்டிருந்தால், அதை குறைத்து, சொகுசு பஸ் நான்கு, சாதாரண பஸ் ஒன்று என மாற்றி விட்டனர்.இதன் காரணமாக, சாதாரண பஸ்சிற்கு கூட்டம் அதிகமாகி, மக்கள் அல்லல்பட வேண்டியுள்ளது. அது மட்டுமல்ல, கூலி வேலைக்கு செல்வோரும், கட்டட வேலைக்கு செல்வோரும், அரசு அலுவலகங்களுக்குச் செல்வோரும், குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண்டும் என்ற காரணத்தால், சொகுசு பஸ்சில் அதிக கட்டணம் கொடுத்து பயணம் செய்கிற ஒரு சூழ்நிலையை போக்குவரத்துத்துறை உருவாக்கியுள்ளது.முன்பெல்லாம் பஸ் கட்டணம் உயர்த்த வேண்டும் என்றால், சட்டசபையில் தீர்மானம் கொண்டு வருவர். அதன் பின், பஸ் கட்டணம் உயர்த்தப்படும். ஆனால், இப்போது அவ்வாறு இல்லை. போக்குவரத்துத் துறை இயக்குனரே, தன் இஷ்டம் போல் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம், கேள்வி கேட்க நாதியில்லை.கடைசியாக நடந்த இடைத்தேர்தலின் போது, மூன்று ரூபாய் கட்டணத்தை இரண்டு ரூபாயாக குறைத்தனர். "தேர்தல் தேதி அறிவித்த பிறகு, கட்டண குறைப்பு சட்ட மீறல்' என, தேர்தல் கமிஷன் சுட்டிக் காட்டியதால், அதை திரும்பப் பெற்றனர். உண்மையிலேயே மக்கள் மீது அரசுக்கு அக்கறை இருந்திருந்தால், தேர்தல் முடிந்தவுடன் இரண்டு ரூபாய் கட்டணத்தை அமல்படுத்தி இருக்க வேண்டும்; ஆனால், அரசு அவ்வாறு செய்யவில்லை. இதன் மூலம், ஓட்டுக்காக, என்ன வேண்டுமானாலும் செய்வர் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.எனவே, பஸ் கட்டண உயர்வு இல்லை என்ற முதல்வரின் கூற்று சரியல்ல.



நிரந்தரத்தீர்வு காண... : வை.சிவசாமி, முன்னாள் ராணுவ வீரர், ஆவடியிலிருந்து எழுதுகிறார்: நக்சலைட்களின் அட்டகாசம், நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. இதற்கான முழு பொறுப்பையும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி தான் ஏற்க வேண்டும். மாநில அரசுகளை குறை சொல்லி, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசுவது முறையல்ல.நச்சலைட்கள் ஆதிக்கம் உள்ள மாநிலங்களான மே.வங்கம், பீகார், ஜார்க்கண்ட், ஒரிசா, மத்திய பிரதேசம், சத்திஸ்கர் போன்ற மாநிலங்களில், எந்த விதமான வளர்ச்சி திட்டங்களும், அந்த ஆதிவாசி இன மக்களுக்கு போய் சேர்வதில்லை.மனிதனுக்கு அத்தியாவசியமான உணவு, குடிநீர், வீடு, கல்வி, சாலை வசதி, மின்சாரம், மருத்துவ வசதி போன்ற, அனைத்து வசதிகளும் சரிவர கிடைக்காததால், நக்சலைட்களை நம்பி, அவர்கள் வாழ வேண்டிய நிர்பந்தம்.ஆதிவாசி இன மக்களுக்கு, கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளுக்காக, போராடும் போராட்ட குழு தான் நக்சலைட். இந்த மாநிலங்களில், அதிக கனிம வளங்கள் உள்ளன. இதனால், அதிக அளவு சுரங்கத் தொழில் நடைபெறுகிறது.மத்திய, மாநில அரசுகள், அதன் மூலம் கிடைக்கும் வருவாயை பங்கு போட்டுக் கொள்வதில் மும்முரமாக உள்ளன. ஆனால், அந்தப் பகுதி மக்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதியும் செய்து தர முன்வருவதில்லை. நக்சலைட்களுக்கு எதிராக, விமான தாக்குதல் நடத்தக் கூடாது. அதையும் மீறி நடத்தினால், அப்பாவி பொதுமக்களும், ஏராளமான வனவிலங்கு, வன உயிரினங்களுக்கும் சேதம் உண்டாகும். மேலும், அடர்ந்த காடுகளும், செடி, கொடி, விலையுயர்ந்த காட்டு மரம், தீப்பற்றி எரிய வாய்ப்புள்ளது. இவைகளுக்கு சேதம் உண்டாகாமல், நக்சல் மீது தாக்குதல் நடத்தி, அவர்களை ஆயுதங்களை கீழே போட்டு சரணடையச் செய்யலாம்.நக்சலைட்களின் ஆதிக்கம் அதிகமுள்ள பகுதிகளில், தேவையான வளர்ச்சி திட்டங்களை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தி, அப்பகுதி ஆதிவாசி இன மக்களின், அன்பையும், ஆதரவையும், நம்பகத் தன்மையையும் பெறுவதன் மூலம், நிரந்தர தீர்வு காணலாம்.



எச்சரிக்கைபோர்டுவைக்கலாம்!எஸ்.சந்தானம், சென்னையிலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில் சமீபகாலமாக கொலை, கொள்ளை செயின் பறிப்பு, பஸ் விபத்து போன்ற கொடூரச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மிருகங்களுக்கு காடு புகலிடமாவதைப் போல் குற்றவாளிகளுக்கு சென்னை புகலிடமாகி விட்டது.ஆட்டை கடித்து, மாட்டைக் கடித்து, பின் மனிதனையே கடிப்பது போல், கொள்ளைக்காரர்கள், காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர், ஹசன் அலி வீட்டையும் விட்டு வைக்கவில்லை. கொள்ளைக்காரர்களுக்கு துணிச்சல், சமீபகாலமாக அதிகமாகி விட்டது குற்றங்களும், குற்றவாளிகளும் நிறைந்த நகரமாக, சென்னை மாறிவிட்டது. காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஹசன் அலிக்கே இந்த கதி என்றால், சாதாரண மக்களின் கதி என்னவாகும்.இப்படி செய்தால் என்ன?நெடுஞ்சாலைகளில், "இது விபத்து நடக்கும் பகுதி' என்று போர்டு இருக்கும். மின்சார கம்பங் களில், "உயர் அழுத்த மின்சாரம்' என்று போர்டு போட்டு, அதில் மண்டை ஓடு படம் போட்டிருக்கும். அதேபோல், இனிமேல் அரசு, "இது கொள்ளை நடக்கும் ஏரியா, இது செயின் பறிக்கும் ஏரியா' என்று போர்டு வைத்து விட்டால், பொது மக்கள் உஷாராகி விடுவர்.வரும் முன் காக்க அரசு, இதை உடனடியாக செய்ய வேண்டும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us